ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பீர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு வருவது வழக்கம். இதே பஸ்சில் மேலுமலை கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மகன் கார்த்திகேயனும் தினமும் வருவார். அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது.
இவர் கடந்த ஒரு மாதமாக தினமும் அந்த கல்லூரி மாணவி செல்லும் பஸ்சில் ஏறி அவரது இருக்கை அருகே நின்று கொண்டு, தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ள ஆபாச படத்தை காண்பித்து சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் வழக்கம் போல் அந்த மாணவி பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் ஏறிய வாலிபர் கார்த்திகேயன் அதேபோல் மீண்டும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படத்தை எடுத்து காண்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது தொலைபேசி மூலம் சித்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் உறவினர்கள் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தயாராக காத்திருந்தனர். பஸ் நின்றவுடன் அவர்கள் வாலிபர் கார்த்திகேயனை பஸ்சை விட்டு வெளியே இழுத்து வந்தனர். அனைவரும் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பிறகு கார்த்திகேயனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.