இன்று 375வது பிறந்த நாளை கொண்டாடும் சென்னை!!

637

chennai

தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்கார சென்னை இன்று தனது 375வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி, ஒரு வாரத்துக்கு நகரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஒகஸ்ட் 22ம் திகதி உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே அன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் சென்ட் ஜோர்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கியுள்ளார்.

அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டில் சென்ட் ஜோர்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது. 1646ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19 ஆயிரம்.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம் ஆகும். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.

சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் 1639 ஒகஸ்ட் 22ம் திகதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம்.

இந்த தினம் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளை படங்களுடன் 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக்கண்காட்சி, உணவு திருவிழா, மராத்தான் ஓட்டம் என பல்வேறு பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னைக்கு இன்று வயது 375. மெட்ராஸ் டேயை முன்னிட்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து “நம்ம சென்னை” என்ற தலைப்பில் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இன்று காலை மைலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகன்ட்டரி பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.

இதே போல், இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் உள்ள பிரஸ் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அரங்கத்தில் சென்னை வரலாற்றை விளக்கும் ஆவணப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதே போல், ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.