தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டியது அவசியம் – வவுனியா மாவட்ட வேட்பாளர் பிரசாத்..!

523

imageதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டிய தேவை இருப்பதாக எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதேச மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:

“எமது இனம் காலங் காலமாக வாழ்வதற்காகப் போராடியும், போராடுவதற்காக வாழ்ந்தும்வரும் இனமாக எல்லையற்ற துன்பங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருவதுடன் ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியப் போக்கினாலும் சீரற்ற பொருளாதாரக் கொள்கையினாலும் எமது மக்கள் போக்கிடம் இன்றி கடன் சுமைகளைச் சுமந்துகொண்டு தற்கொலைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு புறத்திலே உரிமைகள் மறுக்கப்பட்டும் மறுபுறத்திலே பொருளாதார, கலாச்சார, சமய விழுமியங்களும் நலிவுற்றுள்ள இத்தருணத்தில் மாகாணத்திலும் தமிழ்மக்களுக்காகக் குரல்கொடுக்கக் கூடியதும் தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கு உணர்த்தக்கூடியதும் சகல இன மக்களையூம் சமமாக மதிக்கும் ஒரே ஒரு தேசியக்கட்சி ஐக்கியதேசியக்கட்சி மட்டுமே” எனத் தெரிவித்தார்.

அத்தோடு தம் பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும், அபிவிருத்திப் பணிகளையும் பட்டியலிட்ட அவர் தன்னை மாகாணசபை உறுப்பினராக மக்கள் தெரிவுசெய்யுமிடத்து பிரதேச சபையின் ஊடாக வழங்கிய அபிவிருத்திப் பணிகளையும் விட பலமடங்கு பணிகளையும் சேவையிகளையும் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

1 2 3 4