ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி!!

790

111115xinwen2

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது.

இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நிலவுக்கு செலுத்த இருக்கும் ரொக்கட் மற்றும் அதன் பிற பாகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை முயற்சிகளும் முடிவுற்றதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

சீனர்களின் புராணத்தின்படி நிலவுக்கு சென்ற அவர்களது பெண் கடவுளின் பெயரையே இந்தத் திட்டத்திற்கும் வைத்துள்ளார்கள்.

சங்கே-3 எனப்படும் இத்திட்டத்தின் மூலம் வேற்றுக் கிரகத்தின் மீது தம்முடைய முதல் மென்மையான தரையிறக்கமாக இந்தப் பயணம் இருக்கும் என்று திட்டத்தலைவர் மா சிங்குரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் சிக்கலானதும் கடினமானதும் மட்டுமின்றி பெரும் பொறுப்புகளையும் அபாயங்களையும் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சங்கேயின் முதல் திட்டமானது கடந்த 2007ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. அப்போது, அந்த விண்கலமானது நிலவின் கோள்வட்டப்பாதையில் சுற்றிவந்தது.

பின்னர் 2010ம் ஆண்டில் செலுத்தப்பட்ட மற்றொரு விண்கலமானது ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொண்டது. சங்கே-3ன் பயணத் திட்டம் முந்தைய இரண்டு திட்டங்களையும் இணைத்து அமைக்கப்படும்.

அதேசமயம் சீனாவின் விண்வெளிப் பொறியாளர்கள் மனிதர்களை அனுப்பக்கூடிய ஒரு நிலவுப்பயணத்தைப் பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.