தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை விட்டு விட்டு செவ்வாய் கிரகத்தில் குடியேற மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மார்ஸ் வன் என்ற நிறுவனம், 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே செவ்வாய் கிரகம் செல்ல விரும்புபவர்களை அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஏராளமானோர் செவ்வாய் கிரகம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் செல்வதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்து குறித்த நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா(47,654), இந்தியா(20, 747), சீனா(13, 176), பிரேசில்(10, 289), பிரிட்டன்(8,497), கனடா(8,241), ரஷ்யா(8,197) மற்றும் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டினரும் இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் உள்ளனர்.
இன்னும் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு சுற்றுகளில் தெரிவு குழுவினர் ஆய்வு செய்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தகுதியானவர்களை இந்நிறுவனம் தெரிவு செய்ய உள்ளது.
மேலும் 2ம் சுற்று நேர்காணல் 2014ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்றும், நேரில் பேட்டி கண்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு முதல் அவர்களுக்கு முழு நேர பயிற்சி அளிக்கப்படும்.
இதனை தொடர்ந்து 2023ல் இந்த குழுவில் இருந்து சிலர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.