சேகுராவின் நினைவுகளை சுமந்து அவரின் கொள்கையுடன் ஒன்றுபட்ட மக்களாக இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் சோசலிச இளைஞர் சங்கத்தால் மோட்டர்வாகனப் பவனி மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆஜென்ரீனாவில் பிறந்த சேகுரா உலகின் எல்லா இடங்களிலும் வாழும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு இனம், மதம், மொழி, சாதி வேற்றுமைகளற்ற சிறந்ததோர் சமுதாயத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக உயிர் தியாகத்துடன் போராடி பொலிவியாவில் கொலை செய்யப்பட்டார்.
இவர் கியூபா, பொலிவியா, கொங்கோ ஆகிய நாடுகளில் மக்களின் விடிவுக்காக போராடினார்.
சகோதரத்துவ கொள்கையுடன் சமாதானமான வாழ்வுக்காக போராடிய சேகுராவின் நினைவுகளைச் சுமந்து அவரின் வழியில் சகோதரத்துவத்திற்கான வாழ்க்கைப் பயணத்தைக் கட்டியெழுப்பும் முகமாக ஜே.வி.பி இன் சோசலிச இளைஞர் சங்கத்தால் இவ் மோட்டர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 8 ம் திகதி இருநூற்றுக்கு மேற்பட்ட மோட்டர் சைக்கிள்களுடன் 400 வரையானோர் இந்த பேரணியை ஆரம்பித்து காலி, அம்பாந்தோட்டை, மிகிந்தலை, பதுளை, அனுராதபுரம் என பவனி வந்து இன்று வவுனியாவை வந்தடைந்தது.
வவுனியாவில் இருந்து மீண்டும் அனுராதபுரம் சென்ற அங்கு இடம்பெறவுள்ள மாபெரும் கூட்டத்தில் இப் பேரணி இணையவுள்ளது.