வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பலமுறை நகரசபைக்கு தெரியபடுத்திய போதும் எந்தவிதமான பதிலும் கிடைக்காமையால் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்வதாக அங்காடி வியாபாரிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரசபையே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, எம்மையும் வாழ விடுங்கள், எமக்கு மாற்றிடம் வழங்கு போன்ற வாசங்களை ஏந்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன், ஆளுனரின் ஆணையாளர் முகைதீன், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான சிவகுமார், குமாரசாமி, செல்லத்துரை, முநௌவர் ஆகியோர் வருகைதந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வரும் புதன் கிழமை நகரசபைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு தருவதாக நகரசபை நிர்வாகம் மற்றும் சபை உறுப்பினர்களால் உறுதி மொழியும் வழங்கப்பட்டது.