மும்பையில் நடந்த தீ விபத்தில் பெண் ஒருவரை தோளில் சுமந்த படி நின்ற பொலிசார் தொடர்பான புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, அந்த பொலிசார் நான் மட்டும் அங்கு ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார்.
மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது, இங்கு ஹோட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள 4வது மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ஒன் அபோவ் என்ற ஒரு ஹோட்டலில் கடந்த 28ம் திகதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர், 55 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தின் போது பொலிசார் ஒருவர் இளம்பெண் ஒருவரை தோளில் போட்டுக் கொண்டு தூக்கி வரும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த பொலிசாரின் பெயர் சுதர்ஷன் சிவாஜி ஷின்டே என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், தீ விபத்து நடந்த அன்று இரவு 12.30 மணி அளவில் வாக்கி டோக்கியில் ஷின்டேவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அவர் தனது டீமுடன் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு சென்ற போதே பொலிசாரிடம் ஸ்டார்ச் லைட் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதனால் உள்ளே மயங்கிக் கிடந்தவர்களை வெளியே கொண்டு வர வழி தெரியாமல் முழித்துள்ளனர்.
அப்போது உடனடியாக ஷின்டே உள்ளே நுழைந்துள்ளார். அங்கு அவரை கரும்புகை சூழ்ந்துள்ளது, மூச்சுத் திணறியுள்ளது, இருப்பினும் அவர் தான் முன் வைத்த காலை பின் வைக்கப்போவதில்லை என்று கூறி 8 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து ஷிண்டே கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றியது ஒரு கூட்டு முயற்சி தான் என்னைப் போன்று அங்கு பலரும் பலர் உயிரைக் காப்பாற்றினர். அருகில் இருந்த தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ், கிரி என்ற இளைஞர்களும் உத்வேகத்துடன் செயல்பட்டு பலரைக் காப்பாற்றினர்.
என்னை மட்டுமே ஹீரோவாக உயர்த்திக் காட்டுவது சரியானது அல்ல, 8 உயிர்களை காப்பாற்றியதை விட 14 உயிர்கள் இறந்துபோனது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்..






