தமிழர்களை வியக்க வைத்துள்ள வெளிநாட்டவர்கள்!!

663

 
தூத்துக்குடியில் வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 11 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் “ஆட்டோ சலஞ்ச்” என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28ம் திகதி சென்னையில் துவங்கியது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 பேர் கலந்து கொண்டு ஆட்டோவில் 16 அணியாகப் பிரிந்து 16 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடி வந்தனர்.

உப்பளங்கள், பிரசித்தி பெற்ற பனிமய அன்னை ஆலயம், முத்துநகர் கடற்கரை ஆகியவற்றைப் பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்தனர்.

தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்திற்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையாம் வேட்டி, சேலை அணிந்தனர். 17 அணிகளுக்கும் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நட்டுச்சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன.

ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு குலசைச் சத்தமும் எழுப்பி அசத்தினர்.

பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் வைத்த பொங்கலை வரிசையாகத் தட்டில் வைத்தனர். வெளிநாட்டினர் வைத்த பொங்கலைச் சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியை தேர்வு செய்தனர்.

முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக பச்சை வாழைக் குலைகள் வழங்கப்பட்டன. இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி தெரிவித்தபோது,“ வெளிநாட்டினர் நமது கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.

“தமிழர்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும் போது தனி மரியாதை கிடைக்கிறது. இங்கு ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று” என வெளிநாட்டினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர் வரும் 6ம் திகதி அங்கிருந்து அவரவர் சொந்தநாட்டிற்கு திரும்புகின்றனர்.