பரிதாபமாய் பலியான நிறைமாத கர்ப்பிணி: கணவனின் கண்ணீர் பேட்டி!!

531

 
கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த 8 மாத கர்ப்பிணியான நஷிதா, யாரும் உட்கார இடம்கொடுக்க முன்வராத நிலையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் நஷிதா, இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். எட்டு மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடந்த வெள்ளியன்று வீடு திரும்புவதற்காக தனது மூத்த மகள் மற்றும் சகோதரியுடன் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினார்.

நெரிசல் மிக்க அந்தப் பேருந்தில் கர்ப்பிணியான அவருக்கு இடமளிக்க யாரும் முன்வரவில்லை. ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் கண்டுகொள்ளாத நிலையில், நின்று கொண்டே பயணம் செய்த அவர் வளைவு ஒன்றில் பேருந்து வேகமாகத் திரும்ப, தவறி கீழே விழுந்தார்.

பேருந்தின் கதவு அடைக்கப்படாமல் இருந்ததால் சாலையில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. RIMS மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நஷிதாவுக்கு உடனடி அறுவை சிகிச்சை ஒன்றை செய்த மருத்துவர்களால் குழந்தையை மட்டும் காப்பாற்ற முடிந்தது.

நஷிதாவின் நிலைமை மோசமாகி கடந்த புதனன்று அவர் உயிரிழந்தார், பேருந்தைக் கைப்பற்றியுள்ள பொலிசார் இன்னும் ஓட்டுனரைக் கைது செய்யவில்லை. அவர் மீது கவனக்குறைவினால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நதிஷாவின் கணவர் கூறுகையில், முதன்முறையாக என் மனைவி பேருந்தில் பயணம் செய்தார், இதுவே கடைசி பயணமாக முடிந்தது, கூட்ட நெரிசலில் யாராவது எழுந்து இடமளித்து இருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

பேருந்துகளில் பயணம் செய்யும் நம்மை போன்ற ஏழைகளின் உயிரை அவர்கள் தானே பாதுகாத்துக் கொள்ள வே்ணடும், ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவர்களது கடமையே என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்யும் கர்ப்பிணிகளுக்காக குறைந்தது ஒரு இருக்கையாவது ஒதுக்கப்படவேண்டும் என்று கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.