1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளைஞர் : வலுக்கட்டாயமாக பிச்சையெடுத்த அவலம்!!

581

இந்தியாவில் கடத்தல் கும்பலால் பிச்சைக்கார கும்பலிடம் விற்கப்பட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக சாலையில் பிச்சையெடுத்த நிலையில் நபர் ஒருவர் உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனுப் சிங். இவர் வேலை தேடி மும்பைக்கு வந்த நிலையில் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளார். அவர்கள் அனுப்பை புனேவை சேர்ந்த பிச்சைக்கார கும்பலிடம் 1000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இதையடுத்து கும்பலில் உள்ள துனு கேள் என்ற பெண் அனுப் சிங்-கை தன்னுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக பிச்சையெடுக்க வைத்து வந்துள்ளார். இதில் அனுப் சிங்குக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வருமானம் வந்த நிலையில் அதை அந்த கும்பல் வாங்கி கொண்டு கொஞ்சமாக உணவு மட்டும் கொடுத்து வந்துள்ளனர்.

இதோடு அனுப் சிங் காலை உடைத்து, சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் புனேவில் என்.ஜி.ஓ நிறுவனம் நடத்தி வரும் யோகேஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருந்த போது அனுப் மற்றும் துனு ஆகியோர் பிச்சையெடுப்பதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.

இதையடுத்து காரை நிறுத்தி அவர்களிடம் சென்ற போது துனு பயந்து ஓட இது தான் தப்பிக்க சமயம் என கருதிய அனுப் எல்லா விடயத்தையும் யோகேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அனுப்பை மீட்ட யோகேஷ், துனுவை பிடித்து பொலிசில் ஒப்படைத்தார். துனு மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்ற அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.