வவுனியா, பூம்புகார் பிரதேசத்தில் பிறந்தவுடனே ஆண் சிசுவை கொலை செய்து புதைத்த பெண்ணொருவரையும் அப்பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கன்னி (25) என்ற பெண் இன்று அதிகாலை ஆண் சிசுவொன்றை பிரசவித்துள்ளார். பிரசவித்தவுடனேயே சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்து, அதனை தன் தாயாரான தங்கவேலு காளியம்மாவிடம் (63) தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர்.
குழந்தையைப் பிரசவித்த வேளாங்கன்னிக்கு அதிகளவில் இரத்த ஓட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து இருவரையும் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு இன்று பகல் சென்று புதைக்கப்பட்ட சிசுவையும் தோண்டி எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.