பொதுநலவாய மாநாட்டையொட்டி வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் நேற்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்ட வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சனல் 4 வைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் இவர்களில் சனல் 4 வைச்சேர்ந்தவர்கள் இல்லை என்பதனை உறுதி செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களை வடக்கிற்கு செல்ல அனுமதித்துள்ளனர்.
கார் ஒன்றில் வடக்கு நோக்கி முதலில் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களை வவுனியா கல்குணாமடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் சுமார் அரை மணி நேரத்தின் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதித்தபோதிலும் ஓமந்தை சோதனைச்சாவடியிலும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வேன் ஒன்றில் வடக்கு நோக்கி பயணித்த சில சர்வதேச ஊடகவியலாளர்கள் மீண்டும் கல்குணாமடு பொலிஸ் காவலரணில் சுமார் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தொடர்பிலான விபரங்களை பெற்றதன் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.