சேதப்படுத்தப்பட்ட வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகம்!!

427


1வவுனியா கோயிற்குளம் இளைஞர் கழகம், வவுனியா மாவட்ட செயலகப் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள வளாகத்தினுள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மின் திருத்த வேலைகளை மேற்கொண்ட சிலர் அங்கிருந்த மரங்களை வெட்டி சிலைப் பகுதியில் வீழ்த்தியுள்ளதாகவும் அதன் காரணமாக அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்ட வளாகத்தின் வேலிகள் மின்குமிழ்கள் என்பன உடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இவ்வாறான செயற்பாட்டை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் வெட்டப்பட்ட மரங்கள் இருண்டு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாது பண்டாரவன்னியனின் சிலை உள்ள வளாகம் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மின் திருத்த வேலைகளை மேற்கொண்ட தமிழர்களே மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டது தனக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இவ் விடயம் தொடர்பாக கோவில்குள இளைஞர் கழக செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் மோகன், மற்றும் கழக இளைஞர் இணைப்பாளர் காண்டீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மின்சார சபையினர் இது தொடர்பில் அக்கறை செலுத்தி இரண்டு நாட்களுக்குள் மேற்படி வளாகத்தை இருந்ததைப் போன்று புனரமைப்பு செய்யாத பட்சத்தில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினருடன் தமது கழக இளைஞர்களும் இணைந்து அறவழிப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.