வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தால் 596 பேர் பாதிப்பு, இருவர் மரணம்!!

350

 

டெங்கு நோய்

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 596 பேர் என வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் அவரிடம் இன்று வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் நோக்கில் மீன்கள் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.