வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற நகரசபையில் ஏகமனதாக தீர்மானம்!!

1013

 

மதுபானசாலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், கட்டிட உரிமையாளருக்கும் நகரபிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் த.பரதலிங்கம் குறித்த மதுபான நிலையம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் நகரசபையால் அனுமதி எதுவும் கொடுக்கபட்டதா என கேட்டதுடன் அதனை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன்பொழுது நகரபிதா இ.கெளதமன் குறித்த மதுபானசாலை அகற்ற வேண்டும் என சபை ஓர் தீர்மானம் கொண்டுவரவேண்டும். அத்துடன் குறித்த மதுபானசாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டிட உரிமையாளரால் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்பதுடன் எமது சமூகத்தை சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். குறித்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என்ற பரதலிங்கத்தின் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.