வவுனியாவில் இரு போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன!!

729

போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன

வவுனியா பிரதேசத்தின் கழிவுகள் பம்பைமடுவில் கொட்டப்படுகின்றமையால் தமது கிராமம் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்து சாளம்பைகுளத்தில் வசிக்கும் மக்கள் இன்று (29.01.2019) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன்,

குறித்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வவுனியா நகர சபை ஊழியர்களும் வவுனியா தெற்கு பிரதேச சபை ஊழியர்களும் கழிவகற்றல் வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் ஆறு மணித்தியாலங்களாக ஏ9 வீதியுடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனையத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் , வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் , நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தமையினையடுத்து நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நகரசபை ஊழியர்கள், வவுனியா தெற்கு பிரதேச சபை ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டதுடன் ஏ9 வீதியுடான தடை நீங்கியது.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் H.M.ஹனிபா இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஒருமாத காலத்தினுள் சிறந்ததொரு தீர்வையினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதினைத்தடுத்து சாளம்பைக்குளத்தில் பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் கைவிடப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் குப்பை கொட்டுதல் தொடர்பான நீண்டகால பிரச்சனை தொடர்பான பொதுமக்கள் எனக்கு முறையிட்டனர்.

நாங்கள் மாவட்ட செயலக ஊழியர்களுடன் பல தடவைகள் அழைத்து கலந்துரையாடியுள்ளோம். அவ்விடத்திலிருந்து குப்பை கொட்டும் இடத்தினை அகற்றி வனஇலாக திணைக்களத்துடன் கலந்துரையாடி புதிய இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தற்காலிகமாக ஒரு மாத காலத்தினுள் அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். அவ்விடத்தில் பல கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள சுத்தரிகரிப்பு இயந்திரத்தினை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளோம் எனவும் இதன் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வவுனியா நகரசபையினர் மற்றும் பிரதேச சபையினர் கழிவற்றல் வாகனங்களை குறித்த பகுதிக்கு எடுத்துச்செல்கின்றனர்.