வவுனியா வைத்தியசாலை வாகனத்தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ் வாகனம் : 30 மோட்டர் சைக்கிள்கள் சேதம்!!

558

30 மோட்டர் சைக்கிள்கள் சேதம்

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இடம்பெற்ற விபத்தில் 30 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை முடிந்து வீடு திரும்ப முற்பட்டவேளை வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஹயஸ் ரக வாகனத்தில் ஏறி அதனை திருப்ப முற்பட்டவேளை கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும் வாகனத் தரிப்பிடத்திற்குள் பாய்ந்தது.

இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.