வவுனியாவில் கடந்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் மீட்பு : தாய் மற்றும் தாயின் சகோதரர் உட்பட மூவர் கைது!!

597

8 வயது சிறுவன் மீட்பு

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் புளியங்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயார், தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவன் ஒருவர் புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாகவும், வியாழக்கிழமை கனகராயன்குளம் பொலிசில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாகவும், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசாரும் கவனம் செலுத்தி வந்தனர்.

தாயின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை இன்று அதிகாலை புளியங்குளம் பொலிசார் மீட்டுள்ளதுடன்,

குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்து, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் கனகராயன்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் இக் கடத்தல் நாடகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை விசாரணைகளின் பின்னர் மூவரையும் வவுனியா நீதமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.