வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன் : தாய் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!!

616

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன்

நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திலிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயதுச் சிறுவன் கடந்த புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக கனகராயன்குளம் பொலிசில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு முகவர் ஒருவர் தானே குழந்தையை கடத்தியதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு இரண்டுதடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் , கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, ஓமந்தை, புளியங்குளம் உட்பட பல பொலிஸ் நிலையங்களிற்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை நேற்று அதிகாலை புளியங்குளம் பொலிசார் மீட்டனர்.

குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யபட்ட நபர்களை புளியங்குளம் பொலிசார், கனகராயன்குளம் பொலிசாரிடம் நேற்று மதியம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யபட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு திங்கள்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.