வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நான்கு பிரதி அதிபர்கள் உள்ள நிலையில் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகள் இன்றும் அதிபர், மற்றும் பிரதி அதிபர் இன்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் 4 பிரதி அதிபர்கள் காணப்படுகின்றபோதும் அவர்களை அதிபரோ, பிரதி அதிபரோ இல்லாத பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த விபுலானந்தா பாடசாலையில் 4 பிரதி அதிபர்கள் உள்ளனர். இங்கு மேலதிகமாக உள்ளதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதி அதிபர் மதிவாணன் அவர்களின் சம்மதத்துடன் அவருக்கு வீரபுரம் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவரும் இடமாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார்.





