வவுனியா ஒமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை, ஆலயம் உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதம்!!

906

ஒமந்தையில் மதுபான நிலையம்

ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகாமையில் முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த காணியில் மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று (11.03.2019) காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஒமந்தை கிராம மக்கள் இணைந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
ஒமந்தையில் குறித்த இடத்தில் மதுபானசாலை அமைப்பதற்குரிய அனைத்து விதமான அனுமதியினையும் முறைப்படி உரிமையாளர் பெற்றுள்ளார். குறித்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஆறு பொது அமைப்புக்கள் சம்மதக்கடிதம் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக ஆலயங்கள், பாடசாலை , கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற ஆறு பொது அமைப்புகள் பிரதேச செயலாளர் ஊடக அரசாங்க அதிபருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில் மதுபான விற்பனை நிலையம் அமைவதில் தங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லையென தெரிவித்துள்ளனர்.

ஆகவே மதுபான விற்பனை நிலைய உரிமையாளரிடம் முறைப்படியான சகல ஆவணங்களும் உள்ளமையினால் பிரதேச செயலாளரினாலும் அரசாங்க அதிபரினாலும் எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாக ஒமந்தை மதுபானசாலைக்கான அனுமதியினை தான் வழங்காமல் இருந்ததாகவும் பொது அமைப்புக்கள் கடிதங்கள் வழங்கியமையினால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அரசாங்க அதிபர் தெரிவித்ததாக தெரிவித்தார்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியினை இரத்து செய்யுமாறு கோரி கடந்த 09.03.2019 அன்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.