
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவில் காணப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (30.03.2020) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனையடுத்து அத்தியாவசிப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.

அத்துடன் வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா நகரசபையினரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.

மரக்கறி விற்பனை நிலையங்கள் பரவலாக்கப்பமட்டுள்ளமையால் ஒரு பகுதியில் அதிகளவிலான மக்கள் குவிவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வு பதாதைகளும் வர்த்தக நிலையங்கள் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் வேகமாக பொருட்களை கொள்வனவு செய்வதினை அவதானிக்க முடிகின்றது.





