வவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 பயணிகள் விடுவிப்பு!

880

வவுனியா பம்பைமடு, பெரியகாடு இராணுவ முகாம் மற்றும் வேலன்குளம் விமானப்படை முகாம் என்பவற்றில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பம்பைமடு பெரியகாடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 16 ஆம் திகதி 120 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, பிரித்தானியா, பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பயணிகளில் வெளிநாட்டவர் 04 பேர் உள்ளடங்களாக 104 விமான பயணிகளுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, கண்டி, வவுனியா, புத்தளம், சிலாபம், மாத்தளை உள்ளிட்ட அவர்களது வதிவிடங்களுக்கு 07 பேரூந்துகளில் இராணுவத்தினரால் அழைத்து சென்று விடப்பட்டனர்.


அத்துடன், வவுனியா வேலன்குளம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட 206 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் 10 பேருந்துகளில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.