அரிசி பதுக்கல்..

வவுனியா நெடுங்கேணிபகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (09.04.2020) காலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ அரிசியினை மீட்டெடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது நெடுங்கேணிபகுதியில் அமைந்துள்ள ஓர் வர்த்தக நிலையத்தினுள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் 10 கிலோ அரிசி 200 மூடை (உற்பத்தி திகதி, காலாவதி திகதி, நிறுவனத்தின் பெயர், விலை என்பன முற்றிலும் இல்லாமல்), 1 கிலோ மிளகாய் தூள் 18 பக்கட் (உற்பத்தி திகதி, காலாவதி திகதி, நிறுவனத்தின் பெயர், விலை என்பன முற்றிலும் இல்லாமல்) பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சோதனையில் ஈடுபட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளை தரங்குறைவான வார்த்தைப்பிரயோகங்களினால் பேசியதுடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதினையடுத்து பொலிஸாரின் உத்தரவின் பேரில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அழைத்து வரப்பட்டதுடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 கிலோஅரிசி 25 மூடை (250KG) மற்றும் 1 கிலோ மிளகாய் தூள் 18 பைக்கட் (18KG) ஆகியவற்றினை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதுடன் மிகுதி 10கிலோ அரிசி 175 மூடைகளை மக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு தெரிவித்து வழங்கி வந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 10 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.





