வவுனியாவில் ஊரடங்கு தளர்வு : வர்த்தக நிலையங்கள் பூட்டு : குறைந்தளவு மக்கள் நடமாட்டம்!!

902

ஊரடங்கு தளர்வு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையிலும் வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் நகரில் குறைந்தளவு மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (28.04.2020) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவுள்ளனர்.

குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவதற்காகவும் நகரை மருந்து தெளித்து சுத்திகரிப்பு செய்வதற்காகவும் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைவாக இன்றையதினம் வர்த்தக நிலையங்களை பூட்டி கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு,

வவுனியா அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன நேற்றையதினம் (27.04) ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விடுத்த கோரிக்கைக்கமைவாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் நடமாட்டமும் குறைந்தளவில் காணப்படுகின்றது.

எனினும் வங்கிகள், சந்தைகள், மரக்கறி வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் திறந்துள்ளமையினால் மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.