வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம் : இராணுவம் குவிப்பு : தீவிர சோதனை!!

2816

நகரின் முக்கிய பகுதிகள் முடக்கம்..

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பட்டாணிசூர் பகுதியில் நேற்றையதினம் இரவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு இன்று காலை வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிமித்தம் பயணித்த பொதுமக்கள் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டாணிசூர் பகுதியை சேராதவர்கள் பொலிசாரால் வெளியில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.