வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை!!

2801


நகரின் முக்கிய பகுதிகள் முடக்கம்..



வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முடக்கப்பட்டு வர்த்தகர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.



வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.




குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று (05.01) இரவு கண்டுபிடிககப்பட்டது.


இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.


இதனால் இன்று (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிதித்தம் பயணித்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள வர்த்தகர், ஊழியர்கள் ஆகியோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப்பட்டு வருகின்றர்.