வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வினால் கொரோனா பரவும் அபாயம்!!

1246

கொரோனா வைரஸ் பரவும் அபாயம்..

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (19.10.2021) காலை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

கொரோனா சூழ்நிலை காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல விடயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் விளையாட்டு வீரங்கள் முகக்கவசமின்றியே விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் எத்தனை விளையாட்டு வீரர்கள் இரண்டு தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர் என்ற விபரம் கூட தெரியவில்லை. மேலும் பார்வையாளர்களும் அப்பகுதியில் குழுமி காணப்படுகின்றனர். இவ்விடயங்கள் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாய நிலை காணப்படுகின்றது.

சுகாதாரப் பிரிவினரின் அனுமதியின்றி வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது.

நகரசபை மைதானத்தினை சூழ பலர் சுகாதார நடைமுறைகளை மீறி பார்வையாளர்கள் ஒன்று கூடி நிற்கின்றனர். மேலும் விளையாட்டுக்கழகங்கள் என பலரும் மைதானத்தினுள் பார்வையாளர்களாக அமர்ந்துள்ளனர்.

எனவே நகரசபையினர் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

பொலிஸாரின் உதவியுடன் நகரசபையினர் பார்வையாளர்கள் ஒன்றுகூடுவதினை தவிர்க்க வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் எந்தவொரு விளையாட்டு நிகழ்வும் சுகாதார பிரிவினரின் அனுமதியுடனே இடம்பெற வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.