ருக்சன்..
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (04.07.2022) இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் என்ற 33 வயது குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். அவர் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரெலோ) செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து காரணமாக சில மணி நேர தாமதத்தின் பின்னரே தொடரூந்து தனது பயணத்தை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.