விபத்து..
வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (31.08.2022) மாலை 6.30 மணிளவில் இரண்டு வாகனங்களுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வேப்பங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில்,
வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டதுடன் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மூன்று வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.