கிறிஸ்துமஸ் நாளில் கணவன், மனைவி ஓட ஓட விரட்டிக் கொலை : சகோதரனின் வெறிச்செயல்!!

333

தூத்துக்குடியில்..

ஊரெல்லாம் நட்சத்திரம் கட்டி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியிருந்தது. இந்நிலையில், சொத்துக்காக ஏற்பட்ட தகராறில் சொந்த தங்கையையும், தங்கையின் கணவரையும் அண்ணனே ஓட ஓட விரட்டிச் சென்று கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராம்குமார் (42), லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் ராம்குமாரின் மனைவி மாரியம்மாள் (39). அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ராம்குமாரின் மனைவி மாரியம்மாள், வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தார்.

இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், மாரியம்மாளின் சொந்த அண்ணன் முருகேசன் (50) என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்துக்கள் அனைத்தும் மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் (வயது 20) இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர். இருவரும் சேர்ந்து ராம்குமாரையும், அவரது மனைவி மாரியம்மாளையும் கொலைச் செய்ய திட்டமிட்டனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 7 மணியளவில் ராம்குமார் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகர் 6வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த முருகேசனும், அவரது மகன் மகேஷூம் சேர்ந்து மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினார்கள்.

இதில் ராம்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் இருவரும் சேர்ந்து சரமாரியாக ராம்குமாரை முகம் கழுத்து மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலைச் செய்து விட்டு மாரியம்மாள் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த மாரியம்மாள் மீதும் மிளகாய்ப் பொடியை தூவி அவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் மாரியம்மாள் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவகுமார் மற்றும் போலீசார், இரண்டு பேர் உடலையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டார்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரையும் தேடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.