திருமண வீட்டில் திடீரென கேட்ட அலறல் சத்தம்.. ஓடிப்போய் பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

661

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர்கள் மோகன் தாஸ் மற்றும் சுஜிதா தம்பதி. இவர்கள் இருவரும் அருகில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கின்றனர்.

இருவரும், திருமண மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாதையின் கீழே இருந்த செப்டிக் டேங்க் திடீரென உடைந்திருக்கிறது.

இதனால் மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதா நிலை தடுமாறி உள்ளே விழுந்திருக்கின்றனர். இதனால் அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே, கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் மூலம் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது, தீயணைப்பு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து தக்கலை தீயணைப்பு துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் விரைந்து சென்று செப்டிக் டேங்கிற்குள் விழுந்த மோகன் தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிதாவை மீட்டனர். ஆனால், காயம் காரணமாக சுஜிதா சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனால் திருமண வீடே சோகத்தில் மூழ்கியது.

இந்நிலையில், செப்டிக் டேங்கில் விழுந்ததால் படுகாயமடைந்த மோகன் தாஸை அங்கிருந்த அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். மற்றொருபுறம், வாய்க்காலில் விழுந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்களை மீட்புப் படையினர் மீட்டிருக்கின்றனர்.

கன்னியாகுமரி அருகே திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண், துரதிருஷ்டவசமாக செப்டிக் டேங் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.