பட்டாசு சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரை விட்ட பள்ளி மாணவன்!!

337

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தோப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவபெருமாள். இவரது மனைவி செல்வக்குமாரி. இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 10 வயதில் 5ம் வகுப்பு படித்து வரும் அஜய்குமார் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறான்.

அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது.சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவனை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சைக்காக சேர்த்த சிறிது நேரத்திலேயே அஜய்குமார் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.