இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

252

தென்காசியில்..

குடும்பத் தகராறு காரணமாக தாய் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன். டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரும், மீனா என்பவரும் காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு தியா மூமினா (6) முகிஷா மூமினா (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

முருகனுக்கும் மீனாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய முருகன் மனைவி மீனாவிடம் குழந்தைகளுக்கு ஏன் சாப்பாடு கொடுக்காமல் இருக்கிறாய் என கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தகராறு முற்றியதால் முருகன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் நீண்ட நேரம் கழித்து முருகன் வீட்டிற்கு வந்தபோது மனைவி, குழந்தைகளை காணவில்லை. உடனே அவர் மனைவி, குழந்தைகளை தேடியபோது, அருகில் உள்ள கிணற்றில் தியா மூமினாவின் உடல் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.