அன்று பீடி சுற்றும் வேலை செய்த கூலித் தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி : சாதனை மனிதனின் கதை!!

330

கேரளாவில்..

சுரேந்திரன் கே பாட்டேல், தற்போது இந்தியர்கள் மத்தியில் பிரபலமான பெயராக உருவெடுத்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது, வறுமை காரணமாக குடும்பத்திற்கு உதவும் வகையில் கூலி வேலை செய்தவர்.

பதின்பருவத்தில், அவர் பணம் சம்பாதிப்பதற்காக பீடிகளை சுருட்டும் கூலி வேலை செய்தவர். சுரேந்திரன், 10 ஆம் வகுப்புக்குப் பிறகு தனது கல்வியைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தவர். ஒரு வருடம் பள்ளிக்கு செல்லாமல் வறுமை காரணமாக வேலைக்கு சென்றவர்.

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, ஈ.கே. நாயனார் நினைவு அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். பிறகு அவர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க விரும்பினார், போதுமான பணம் இல்லாததால் அவரது நண்பர்களின் உதவியுடனும், ஒரு ஹோட்டலில் வேலை செய்தும், அவர் 1995 இல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 1996-ல் கேரளாவில் உள்ள ஹோஸ்துர்க்கில் வக்கீலாக பயிற்சி செய்யத் தொடங்கிய அவர், படிப்படியாக சீனியர் வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 2007 இல், அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவரது மனைவி ஒரு முக்கிய அமெரிக்க மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டார்.

தம்பதியினர் நிரந்தர விசா பெற்று தங்கள் மகளுடன் டெக்சாஸின் ஹூஸ்டன் நகருக்கு குடிபெயர்ந்தனர். சுரேந்திரன், டெக்சாஸில் பார் கவுன்சில் தேர்வில் கலந்து கொண்டு முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று ஹூஸ்டன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் LL.M படிப்பிற்கு விண்ணப்பித்தார்.

2011 இல் பட்டம் பெற்ற பிறகு, சுரேந்திரன் கே குடும்பச் சட்டம், குற்றவியல் பாதுகாப்பு, சிவில் மற்றும் வணிக வழக்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பரிவர்த்தனை விஷயங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டார், பின்னர் தனது சொந்த சட்ட நிறுவனத்தை நிறுவினார்.

தற்போது அமெரிக்காவின் டெக்சாஸில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரன், டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் உள்ள 240வது நீதித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார். 51 வயதான அவர் கேரளாவில் காசர்கோட்டில் பிறந்தவர்.