பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு : வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் பெற்றோர்!!

330

கேரளாவில்..

கேரளாவில் இளம்பெண் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி.

வெறும் 20 வயதே ஆகும் இவர், அந்த பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் இவர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு (டிசம்பர் 31) பிரியாணி சாப்பிட எண்ணியுள்ளார்.

அதன்படி ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணியையும், சிக்கன் 65-யும் ஆர்டர் செய்துள்ளார். இதனை இவருடன் சேர்ந்து இவரது தங்கை மற்றும் உறவினர்கள் என அனைவரும் உண்டுள்ளனர்.

ஆனால் இதனை சாப்பிட்ட பிறகு அஞ்சுவுக்கு ஒரே வாந்தியாக வந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்சு, கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கும் அனுப்பி வைத்தனர்.

அதோடு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். தரமற்ற உணவால் கல்லூரி மாணவி உயிரிழந்தது தெரியவந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

தொடர்ந்து உணவகத்தில் செய்யப்பட்ட ரெய்டில் ஓட்டலில் எந்தவொரு பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இவர் உணவு வாங்கிய அன்றே சுமார் 120 பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மாணவி, சாப்பிட்டால் இறக்கவில்லை என்றும் அவருக்கு இருந்த மஞ்சள் காமாலை நோயால் அவரது உள் உறுப்புகள் சில பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக கல்லீரல் பதிப்படைந்ததால் அவர் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக கேரளாவிலுள்ள கோட்டயத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டு, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.