ஷங்கரின், பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களுல் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார்.
ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார்.
பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு “180″ படம் மூலம் தமிழில் மீண்டும் தன் திருமுகத்தை காட்டினார் சித்தார்த், அதன்பிறகு “காதலில் சொதப்புவது எப்படி”, “உதயம்” படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் கடந்தவாரம் வெளியானது.
இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் சக்சஸ் மீட் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்,
நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தீயா வேலை செய்யணும் குமாரு பட ஹிட் போல எனக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படம் வெளியான ஒருவாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுவரை நான் பழகியவர்களில் சுந்தர்.சி போன்று ஒருவர் கிடையாது. பொதுவாக எனக்கு கோபம் அதிகம் வரும், ஆனால் இப்போது அதை குறைத்து கொண்டுள்ளேன்.
இதற்கு சுந்தர்.சியும் ஒரு காரணம். எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படியும் வாழலாம் என்பதை புரிய வைத்தவர் சுந்தர்.சி. வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த நல்ல நண்பர்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தமிழில் நான் அதிகமாக நடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அப்படியல்ல, நல்ல கதைக்காக காத்திருந்து நடிக்கிறேன். அடுத்து தமிழில் நான் 4 படங்களில் நடித்து வருகிறேன்.
ஒன்று பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ஜிகர்தண்டா”, வசந்தபாலனின் “காவியத்தலைவன்” மற்றொன்று எனது சொந்த தயாரிப்பு. எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் இப்படியே இருக்கும் மனநிலை வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எப்போது திருமணம் என கேட்டபோது, இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடம் கிடையாது என்று உறுதியாக சொன்னார் சித்தார்த்.