திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன்.இவர் அதே பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் ஆண்கள் பெண்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் காமராஜ்புரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10 ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த சில மாதங்களாக ஊதுபத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு வந்து மோகன் ஊதுவத்தி மாவு கலக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் கை இயந்திரத்தில் சிக்கி சிக்கியது. உடனடியாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சக தொழிலாளிகள், அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.