வவுனியாவில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை முன்னெடுப்பு!!

1600

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு “நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு” வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று (29.03.2024) இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு உரிய நஷ்டஈடு/ சம்பளம் / காப்புறுதி தொடர்பான சேவைகள் , EPF/ETF தொடர்பான சேவைகள்,

தொழிற்துறை பாடநெறிகள் தொடர்பான பதிவு , தொழில்முனைவாளர்களுக்கு அபிவிருத்தி மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, உத்தேச தொழில்வாய்ப்புகள் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் இவ் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் , ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் உள்ளிட்டவர்களுடன்,

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடமாடும் சேவையில் முன்னெடுக்கப்படும் சேவைகளை நேரில் சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பார்வையிட்டமையுடன் வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நாளைய தினமும் காலை 9.45மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.