வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழா!!

1302

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நேற்று (16.01) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் (15.01) வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வயலில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அறுவடை மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெல் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது.


நேற்றயதினம் (16.01) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு தலைமையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நெற் கதிர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோரால் பெறப்பட்டு அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வணடிலில் வவுனியா பசார் வீதி ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


அதன்பின மாவட்ட செயலகத்தில் நெற்கதிர்களை படங்கில் இட்டு பாரம்பரிய முறைப்படி அதனை சூடடித்து பெறப்பட்ட புதிய நெல்லை பாராம்பரிய முறைப்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி புத்தரிசியில் பொங்கல் இடம்பெற்று சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.