வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரதோற்சவம்!!

640

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவம் (தேர்த் திருவிழா) இன்று (30.05.2026) காலை மிகச் சிறப்பாகவும் பக்திப் பூர்வமாகவும் நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதற்கொண்டே விசேட கிரியைகள் மற்றும் அபிஷேகங்கள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, அடியார்கள் புடைசூழ காளி அம்பாளுக்கு பக்திப் பெருக்குடன் கூடிய வசந்தமண்டப பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

பூஜை வழிபாடுகள் நிறைவடைந்ததும், காளி அம்பாள் உள்வீதி வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் வீற்றிருந்தவாறு அம்பாள், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார்.

அம்பாளின் அருளைப் பெறுவதற்காக வவுனியா மற்றும் அதன் நாலா திசைகளிலிருந்தும் பெருமளவிலான அடியார்கள் ஆலயத்தில் குழுமியிருந்தனர். வீதியெங்கும் பக்தி கோஷங்கள் முழங்க, அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் வீதியுலா வந்த திருத்தேர் காலை 10 மணியளவில் மீண்டும் தனது இருப்பிடத்தை (தேர் முட்டியை) வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, தேரில் வீற்றிருந்த அம்பாளுக்கு மகா தீபாராதனையுடன் கூடிய விசேட அர்ச்சனைகள் இடம்பெற்றன.

இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினரால் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.