
வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது.
இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(23) இடம்பெற்றது. திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில் 1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 3 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் திருமதி சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர், மூன்று இலட்சம் ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்தார்.
குறித்த ஆலய திருவிழாவின் போது மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக அவரே ஆலயத்தில் ஏலம் விடப்பட்ட மாம்பழத்தை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.





