மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் – விஞ்ஞானி சாதனை..!

430


உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



ஜப்பானின் யோகோஹாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் நிகழ்த்திய ஆராய்ச்சியில் உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரல் உருவாக்கப்பட்பட்டுள்ளது.

மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள், பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம், நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும். பெரும்பாலும், மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால், அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படும்.



இம்முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.



அதோடு, ஒரே பிரிவைச் சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும், சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்து, அதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.