இளவரசன் உடல் இன்று நல்லடக்கம்..!

413


ilavarasanதர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். இதனால் அவரது உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

முதலில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை நிபுணர்களான டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார். ரவிக்குமார் ஆகிய 3 பேர் அவரது உடலை பரிசோதனை செய்தனர்.



பின்னர் சென்னை தனியார் கல்லூரி தடயவியல் துறை நிபுணர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகிய 2 பேர் இளவரசன் உடலை ஆய்வு செய்தனர்.

நேற்று டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பணியாற்றும் தடயவியல் துறை மருத்துவம் மற்றும் விஷ முறிவு சிகிச்சை பிரிவு துறையின் தலைமை பேராசிரியர் டாக்டர் டி.என்.பரத்வாஜ், கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் சுதீர்குமார் குப்தா , டாக்டர் மில்லோ டாபின் ஆகியோர் நேற்று மாலை இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.



அப்போது இளவரசனின் பெற்றோர் இளங்கோ–கிருஷ்ணவேணி ,ஊர் கவுண்டர் சின்னசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நந்தன் உள்ளிட்ட 5பேர் மட்டும் உடன் இருந்தனர்.



பிரேத பரிசோதனை முடிந்ததும் மாலை 5–30 மணிக்கு இளவரசன் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இளவரசன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இளவரசன் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் சென்றனர்.


அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

உறவினர்கள், நண்பர்கள் ,நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இன்று மாலை இளவரசனின் உடல் அடக்கம் நடக்கிறது. இதற்காக நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டு சிமிண்டால் கல்லறை வடிவில் கட்டப்பட்டு உள்ளது.

இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதை யொட்டி நத்தம் காலனியில் எஸ்.பிக்கள் அஸ்ரா கார்க் (தர்மபுரி), சக்திவேல் ( கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் பொலிசார் சோதனைச் சாவடிகள் அமைத்து உள்ளனர். தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.