ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!!

362

tamana

ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல் அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா.

தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது ஆந்திரா இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படுகிறது. முன்பு தெலுங்கானா வேண்டும் என்று கோரி பெரும் போராட்டம் நடந்தது. இப்போது தெலுங்கானா வேண்டாம் என்று அதைவிட பெரிய போராட்டம் நடக்கிறது.

தமன்னா நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையம் செல்லும் வழியிலும் ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது.

காருக்குள் இருப்பது நடிகை தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் தமன்னாவிடம், ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஜே (சமய்கியாந்திரா) என்று சொல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அப்படி சொல்லாமல் தமன்னா தவிர்த்தார்.

சொன்னால்தான் அங்கிருந்து காரை செல்ல விடுவோம் என்று போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்தனர். ஒரே சத்தமாக இருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உடனே அவர்களிடம் நடிகை தமன்னா என்னை பேசவிடுங்கள் நான் ஒரு நடிகை. எனக்கு மொழி பேதம் இல்லை.

அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதான் எனது தொழில். ஆந்திராவோ, தெலுங்கானாவோ, தமிழ்நாடோ எனக்கு எல்லாமே ஒன்றுதான். என்னை போகவிடுங்கள். நான் அவசரமாக செல்ல வேண்டும். இப்படி கோஷம் போடுவது என் வேலையில்லை என்று தெலுங்கில் சத்தமாகச் சொன்னார்.

உடனே ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே என்று ஒரு முறை மட்டும் சொல்லுங்கள் போகவிடுகிறோம் என்று பேரம் பேசிப் பார்த்தார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் தமன்னா கடைசி வரை அப்படி சொல்ல மாட்டேன் என உறுதியாக நின்றார். வேறு வழியின்றி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது காரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் நடிகை தமன்னாவின் கார் அங்கிருந்து விமான நிலையம் நோக்கி விரைந்தது.