வவுனியா இராணுவ கல்குவாரியில் டைனமேற் தொடர்ச்சியாக வெடித்தில் நான்கு வீடுகள் சேதம்..!

487

vavuniya1வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள யேசுபுரத்தில் உள்ள இராணுவ கல்குவாரியில் கல்லுடைப்பதற்காக சக்திவாய்ந்த 30க்கு மேற்பட்ட டைனமேற் குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததால் சிதறிய கற்கள் மக்கள் குடிமனைகளுக்குள் வீழ்ந்துள்ளது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக நான்கு வீடுகளினுடைய கண்ணாடி யன்னல்கள் மற்றும் கூரைப்பகுதி என்பன என்பன உடைந்து சேதமடைந்துள்ளது. விடுமுறை தினமாகையால் சிறுவர்கள் வீட்டு முற்றங்களில் விளையாடிக் கொண்டிருந்த போதும் அவர்களுக்கு தெய்வாதீனமாக பாதிப்பு ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் காரணமாக அப் பகுதி மக்கள் வெளியில் திரிவதற்கே அஞ்சுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பாக இராணுவ அதிகாரியை அழைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.