ஆங்கிலமொழியில் பாடங்கள்: விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை..!

361

vavuniyaஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். சவரத் தொழிலாளி. இவரது மகன் தமிழ் செல்வன் வயது-21. பாலிடெக்னிக்கில்“டிப்ளமோ” பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் சேர்ந்தார். கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்வதில் தமிழ்செல்வனுக்குச் சிக்கலாக இருந்துள்ளது என்று தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர்,மதுக்கரை பகுதியில் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.