மானாட மயிலாட பார்த்து பொழுதை கழித்தவர் கருணாநிதி : ஜெயலலிதா!!

377

jayalilatha

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்…

வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி என்ற பழமொழிக்கேற்ப ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைத்து அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய கருணாநிதி, “ஒரு மாதத்திற்கு மேலாக முதல்வர் தலைநகர் சென்னையிலே இல்லையே” என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான் தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்ற ரீதியில் பதில் அளித்து, எந்தப் பத்திரிகையாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியதுண்டா என்றும் அங்கலாய்த்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தின் நன்மைக்காக பல முக்கியப் பிரச்னைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர்.

பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் கூர்ந்து நோக்குவார்களே தவிர முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா, அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா, முதலமைச்சர் யார் யாருடன் விவாதம் நடத்தினார் என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதல்வர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கோடநாடு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா? நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் குறித்தும், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் உரிமைகள் குறித்தும் அவ்வப்போது கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வரும் நான், தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளேன்.

விலைவாசி உயர்விற்கு வித்திடும் பெட்ரோல், டீசல் விலைகளை மாதத்திற்கு இரு முறை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருவதற்கு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியதுடன், பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டிய முறை குறித்தும் எனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இதே போன்று, மத்திய அரசின் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கும் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

அந்த அறிக்கையில், 2014 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை நிர்ணயம் செய்யும் தார்மீக உரிமை அடுத்த ஆண்டு மே மாதம் வரை மட்டுமே ஆட்சியில் இருக்க தகுதியுடைய மத்திய அரசுக்கு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இது தவிர காப்பீட்டுத் துறை, தொலைத்தொடர்பு துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

அந்த அறிக்கையில், இது போன்ற அந்நிய நேரடி முதலீட்டினை தொலைத்தொடர்புத் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன்.

மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பாரதப் பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன்.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகளுடன் நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு, 12.8.2013 முதல் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை 27.7.2013 அன்று வெளியிட்டேன்.

அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு 90,000 கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து வந்தது.

கருணாநிதி முதல்வராக இருந்து தமிழக முன்னேற்றத்திற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை.

தன்னலமின்றி தமிழக மக்களுக்காக உழைப்பது தியாகம். தன்னலத்திற்காக தமிழக மக்களுக்கு உழைப்பது போல் நடிப்பது வியாபாரம். கருணாநிதி எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.