சுவடுகள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். கே.ஆர்.விஜயா முக்கிய பாத்திரத்தில் வருகிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். தற்கொலை முடிவுகளை சாடும் கதையம்சத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. 40 அடி உயர கிரேனில் கேமராவை பொருத்தி கே.ஆர்.விஜயா, மோனிகா நடித்த காட்சிகளை ஜெய்பாலா படமாக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மழையில் மண் ஈரமாகி இருந்ததால் கிரேன் பிடிப்பை இழந்து திடீரென சரிந்தது. கே.ஆர்.விஜயா, மோனிகா தலையில் அது விழப்போனது. உடனே படக்குழுவினர் அலறி சத்தம் போட்டார்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த 200 பேர் ஓடிச்சென்று கிரேனை தாங்கி பிடித்தனர். இதனால் கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். கிரேன் பழுதாகியது.
இதுகுறித்து ஜெய்பாலா கூறும்போது, விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினோம். இக்கட்டான சூழலிலும் காட்சிகள் அழகாக படமாகியுள்ளன என்றார். இப்படத்தில் மோகன்சர்மா, கலைஞானம் போன்றோரும் நடிக்கின்றனர். காதல், காமெடியும் படத்தில் இருக்கும். தற்கொலை முடிவுகளை தடுப்பதாக இப்படம் இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்.